Friday, 31 December 2010

புத்தாண்டு புதிதாக வா

பொங்கும் இன்பம் எங்கும் பரவி
            தங்கும் நேரம்
விழியில் நனைந்து மொழியில் கலந்து
                  மகிழும் காலம்
உயிரில் உறைந்து உறவில் வளர்ந்து
                உலவும் வேளை
எங்களின் அன்பும் உங்களின் அன்பும்
                 சங்கமமாகி

பிறக்கட்டும் புத்தாண்டு
இறக்கட்டும் துன்பங்கள்
சிறக்கட்டும் இன்பங்கள்
திறக்கட்டும் பூரிப்பு
கறக்கட்டும் வெற்றிகளை
மறக்கட்டும் பழச்சோகம்
பறக்கட்டும் புது வேகம்

புத்தாண்டு புதிதாக வா
எல்லோர்க்கும் பொதுவாக வா

அக்கினி
ச.நித்தியராம்

Tuesday, 7 December 2010

கானல் நீர்

விடிகின்ற இரவும்
மடிகின்ற பகலும்
சந்திக்கும் வேளை

உடைகின்ற இதயம்
விடைகான முயலும்
பொன்னந்தி மாலை

வடிகின்ற அழகில்
முடிசூடா ராணி
திரிகின்ற சோலை

உலவும் மகளை
வலம் வந்து பார்த்தேன்
மலர் போலும் என்மங்கை இல்லை

ஓயும் பகலில்
பாயும் விழியில் கண்டது
தேயும் நிலவோ?

பின்தான் தெரிந்தது
அது நிலவும் இல்லை
நிலவின் நிழல் என்று!!


அக்கினி
ச. நித்தியராம்
 

Monday, 22 November 2010

Actor kamal poem- கமலின் கவிதை

என்னை கவர்ந்த உலகநாயகன் கமலகாசன் மன்மதன் அம்பு படத்தில் எழுதிய கவிதை,  இங்கே உங்களுக்காக 


கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம்  பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று 
இயற்றத் துணியும்  அணி சேர்த்துக்கொள்.




கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே.

Tuesday, 16 November 2010

கைக்கூ - என் மனதில் பட்ட சில .....



மழைத்துளி
நீல வானம் நிர்வாண மீன்களுக்கு அனுப்பும் கடிதம்

காதல்
கண்களில் ஆரம்பித்து கண்ணீரில் முடியும் கதை

கல்யாணம்
இஷ்டப்பட்ட இருவர் சேர்ந்து கஷ்டப்பட ஆரம்பிக்கும் செயல்

கண்ணீர்
பெண்களுக்கு அருவி, ஆண்களுக்கு குளம், குழந்தைக்கு உதவி, தமிழர்க்கு அன்றாட நிலை.

கனவு
ஒவ்வொருவரும் கதாநாயகராக நடிக்கும் இரவு நேர குறும்படம்.

கடிதம்
அழிந்து கொண்டிருக்கும் உயிரில்லா இனம்

தமிழ்
புலம்பெயர் தமிழர்கட்கு பிடிக்காத மொழி

லண்டன்
பட்டதாரிகள் பெற்றோல் விற்குமிடம்

அக்கினி
ச.நித்தியராம்

Monday, 15 November 2010

கண்மூடித்தனம்


கண்களை மூடிக்

காணும் கனவில் 

காதல் காட்சியில் 
நானும் நீயும்

தவறிலா உறவில் 
தளிர்த்திடும் நாம் 
தவறுகள் செய்வோம் 
தடைகள் இல்லை 

நேரிலே காண்போம் 
நிஜத்திலே நிகர் நிகர் 
நிற்போம் ஆனால் 
நித்திரையில் தான் உரையாடல்

வண்ணக் காதலை இன்னும் 
சொல்லவில்லை ஆயினும் 
வசந்தக் கனவில் 
வரையிலா உறவுகள் 

கட்டிலில் புரண்டு 
கண்களை மூடின் 
இமைஓரம் உன் 
இளமை உருவம் 

நிஜத்திற்கும் நினைவிற்கும் 
இடையில் 
ஓர் கந்தர்வ ராகம் 
நம் கண்களுகிடையில்

மௌன தேசத்தின் 
மந்திர வார்த்தைகள் நம் 
மனங்களுகிடையில் 
மகிழ்ச்சிப் போராட்டம் 

பொசுங்கும் கனவால் 
பொறி தட்டும் நினைவில் 
பொருமும் நான்

அரும்பும் புன்னகை 
ஆனந்த வெள்ளத்தில் 
அமைதியாய் நீ 

அக்கினி
ச நித்தியராம்
 


Saturday, 13 November 2010

வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?



November 13 2010 இன்று வாலிபக்கவி வாலியின் 80 வது பிறந்த தினம், கவிதையால் உலகை வென்ற வாலி சிறந்த எழுத்தாளனும் கூட. என்னை ஈர்ர்த்த நான்கு கவியாளர்களில் முதலிடம் கண்ணதாசனுக்கு, அடுத்தது வாலிக்கு . ஆக வாலியின் எழுத்துக்களில் எனக்கு பிடித்த ஒன்று இங்கே. 



'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்கிறது தொல்காப்பியம்.
ஒரு சொல் ஒரு பொருளைக் குறிக்கலாம்; ஒன்றுக்கு மேலும் குறிக்கலாம்; அது வியப்பல்ல! ஆனால், ஒரு சொல்லுள் ஓரைந்து சொற்கள் உள!
அந்தச் சொல்தான் 'வாழ்க்கை'!


'வாழ நினைத்தால் வாழலாம்' எனும் கண்ணதாசன் பாட்டுக்கு உரிய வியாக்கியானம் - 'வாழ்க்கை ' எனும் ஒரு சொல்லுள் ஒளிந்துகிடக்கிறது. 
அதனை  ஓர்வார், வெற்றித் தேரில்  ஊர்வார்!


வறுமையிலே வாடிகொக்ண்டு, வாழ்க்கை தமக்கு வாய்க்கவில்லையே  என -மூக்கைச் சிந்துவோருக்கு எல்லாம் ஒன்று சொல்லுவேன்.
'ஊழிற் பெருவலி யாவுள' என்பது, ஒருபுறம் இருக்கட்டும். 'வாழ்க்கை' எனும் சொல்லை -அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பாருங்கள்...
அந்த ஊழ், ஆகும் கூழ்!
நொந்தாரையும்; நொந்து நொந்து வெந்தாரையும்  பார்த்து... வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கின்றது 'வா' என்று;
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்து 'வாழ்' என்கிறது.
எதனை நம்பி என்னும் கேள்விக்கு, நான்காம் எழுத்து நவில்கின்றது விடை  'கை ' என்று;
அதுமட்டும் அல்ல,கை கொண்டு உழைத்தாலும் , காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று சொல்கிறது - முதல் எழுத்தும், மூன்றாம் எழுத்தும், நான்காம் எழுத்தும்
சேர்ந்து 'வாக்கை' என்று;
மேற்சொன்ன கருத்தை  உள்வாங்கி உழைத்தால்  - நீ பெறுவது  என்னவென்று முதல்
எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து சொல்கிறது 'வாகை' என்று!


'வா';
'வாழ்';
'கை';
'வாக்கை ';
'வாகை '; - எனும் அய்ந்து சொற்களை  தன்னுள் சூல்கொண்டு நிற்கும் ஒரே  சொல் 'வாழ்க்கை'!
ஆக, அடியேன்  அறிவிப்பது ஆதெனில்.. வாழ்க்கை என்பது மழை நாளில் உன்வீட்டு வாசலில் முளைக்கும்  நாய்க்குடை  அல்ல; அது நிழற்குடை!
தாரித்திரிய வெயில் தழல் பரப்பி, உனைத் தகிக்கையில் - உனக்கு நிழல் பரப்பி உதவவல்ல அந்த  நிழற்குடையை, நீதான் முயன்று முன்னின்று வனைந்தெடுக்க வேண்டும் !
நாய்க்குடை  - வான் வடிக்கும் நீரில் விளைவது;
நிழற்குடை, 
உனது ஊன் வடிக்கும் நீரில்  உண்டாவது!
வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?'


அக்கினி 
ச.நித்தியராம் 

Thursday, 11 November 2010

அரகர வேலா அனுதினம் வா வா -----------காவடிச் சிந்து


வேலும் மயிலுடன் பக்கம் இருக்கிற 
வேலன் முருகனை கும்பிடுவோம் 
வடி வேலன் முருகனை கும்பிடுவோம்

நோய் விட்டு ஓடிட தொல்லைகள் நீங்கிட 
மாவிட்ட கந்தனை பாடிடுவோம் 
எங்கள் மாவிட்ட கந்தனை பாடிடுவோம் 

நாடு செழித்திட நாமும் வளம்பெற 
கேதீசன் மகனே வாருமையா 
திருக் கேதீசன் மகனே வாருமையா 

கதிர்காமத்துறையும் கந்தவேலாயுதா 
காக்க விரைந்து நீ ஓடி வா வா 
எமை காக்க விரைந்து நீ ஓடி வா வா 

இணுவையம்பதிஉறை கந்த சுவாமியே 
இன்னல்கள் நீக்கிட வந்திடுவாய் 
எம் இன்னல்கள் நீக்கிட வந்திடுவாய் 

காவடியாடியே கால்நடையாகவே 
காலடி நாடுவேன் கண்திறவாய் 
உன் காலடி நாடுவேன் கண்திறவாய் 

பாலும் பழமுடன் தேனும் கலந்திட்ட 
மாவும் பிசைந்துன்ன நான் தருவேன் 
தினை மாவும் பிசைந்துன்ன நான் தருவேன் 

பாலமுருகனே மாலின் மருகனே 
பாவம் பொடிபடச் செய்திடுவாய் 
எங்கள் பாவம் பொடிபடச் செய்திடுவாய் 

குதிரை முகந்தனை நீக்கிய வேலா 
குன்றில் அமர்ந்திடும் உமையவள் பாலா 
உயர் குன்றில் அமர்ந்திடும் உமையவள் பாலா 

வண்ண மயிலோனே வள்ளி மணாளனே 
வந்தனம் சொல்லியே வாழ்த்திடுவேன் 
உன்னை வந்தனம் சொல்லியே வாழ்த்திடுவேன்

எங்கள் மனத்துறை மாவையின் கந்தா 
அரகர வேலா அனுதினம் வா வா 
அரகர வேலா அனுதினம் வா வா 
அரகர வேலா அனுதினம் வா வா 

அக்கினி 
ச.நித்தியராம் 

Wednesday, 10 November 2010

வரவேண்டும் வசந்தம் அதை தரவேண்டும் நீயே!


சிந்தைஉருகி உன் சிலையடி வந்தேன்
சந்தமுருகி வந்தனம் தந்தேன்
விந்தை புரியும் வேலா வடிவழகா உன்
பந்தம் எனக்கு வேணும் தருவாயா

விதியோடு சதிசெய்யும் வினைபோதும் என்று
நதியோரம் நீவாழும் கதிர்காமம் வந்தேன்
சுதியான செல்வங்கள் புகழ் வேண்டாம் நீயே
கதி என்று வாழும் உன் நினைவொன்று போதும்

மருள் நீங்க வேண்டும் நாட்டில் உன்
அருள் ஓங்க வேண்டும் மக்கள்
தெருச்சண்டை மதச்சண்டை இனயுத்தம் நீங்கி
வரவேண்டும் வசந்தம் அதை தரவேண்டும் நீயே

தாயென்று உன்னை நம்பி பல உயிர்கள் வாழுது
தாவென்று ஒன்றும் நாம் கேட்க மாட்டோம்
சேயென்று நீ எண்ணிச் செய்யத்தான் வேண்டும் உன்
சேவடியே கதியென்று வருகின்ற அடியாரை

தீர்த்தங்கள் ஆடி திருநீறும் சூடி
மூர்த்தியுனை பார்த்து மனம் வேண்டுது
வார்த்தையில்லை வடிக்க வேலா எம் துன்பத்தை
தீர்வொன்றை தந்து திருத்திவிடு நாட்டை !

அக்கினி
ச.நித்தியராம்

Tuesday, 9 November 2010

எண்ணம் போல் வாழ?????

பக்கத்தில் இருந்து
பக்குவமாய் பரிவு சொல்ல
அன்புள்ள ஆர்வத்தில்
ஆறுவது சினம் சொல்ல
கண்ணாலே மொழி பேசி
காதல் எனும் கதை சொல்ல

இரவு கண்ட கனவெல்லாம்
இதழோரம் சொல்ல
உள்ளத்து ஆசையெல்லாம்
உருக்கமாய் சொல்ல
நிலவொளியில் அமர்ந்திருந்து
நீண்ட நேரம் கதைக்க

மழைத்துளி சேர்த்து
மார்பெல்லாம் தெளிக்க
சின்ன கோபமூட்டி
சீறும் அழகு காண
வண்ண உடைகள் மாட்டி
வாலிபத்து எழில் காண

நாலு பொய் சொல்லி
நம்பும் விழிகள் காண
செல்லமாய் அழவைத்து
செப்பும் மொழிகள் காண
சித்திரச் சேலை கட்டி
சிங்கார நடை காண

கன நேரம் காக்கவைத்து
கக்கும் கோபம் காண
தினமும் பிந்தி வந்து
திட்டும் மொழி கேட்க
மடி மீது தலை சாய்த்து
மனம் விட்டு கதைக்க

அந்தரங்கம் பாக்க கேட்டு
அடிக்கும் கைகள் பாக்க
உரசல் இல்லா உறவு கொண்டு
விரசம் இல்லா வாழ்வு காண
மனக்குறை சொல்லி
மார்போடு அணைக்க

வண்ணம் கொண்ட பூமியில்
எண்ணம் போல் வாழ ?????????

அக்கினி 
ச. நித்தியராம் 

Saturday, 6 November 2010

விலை

கட்டுக் குலையாத கண் கவர் நடை
தட்டித் தடுமாறும் தாவணி இடை
கொட்டும் அழகில் மயங்குது படை
வெட்டும் விழிகளில் திறக்குது மடை

சுட்டும் விழிப் பார்வை ஒரு கொடை
மொட்டவிழ் வயதுக்கு ஏது தடை
பட்டு அணிந்து கவர்ச்சி படை
எட்டி நின்று கேட்பேன் தா ஒரு விடை

வட்டிக்கு வாங்கலாம் அவள் குடை
துட்டுக்கும் கேட்கலாம் அவள் சடை
எட்டியும் பார்க்கலாம் கண்ணின் கடை
பட்டதும் கேட்கலாம் நீ என்ன விலை


அக்கினி
ச. நித்தியராம்